High Court dismisses case seeking non-disclosure of marks of Class X students!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில், இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடும்போது மாணவர்களின் மதிப்பெண்களை வெளியிடக்கூடாது, வெறுமனே அவர் தேர்ச்சி பெற்றவரா, இல்லையா என்பதை மட்டுமே வெளியிட உத்தரவிடவேண்டுமென சென்னையைச் சேர்ந்த வெற்றிசெல்வன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு ப்ளீடர் முனுசாமி, கடந்த ஆகஸ்ட் 10 -ஆம் தேதியே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டு விட்டன. காலாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 40 சதவீதம், அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 40 சதவீதம், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதம் என மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. உரிய நெறிமுறைகளுடன் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுவிட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

Advertisment

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.