கல்வி கடன் வழங்க மறுத்த இந்தியன் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் மாணவர் நவீன். 12ஆம் வகுப்பு தேர்வில் 1017 மதிப்பெண் பெற்ற நவீனுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பதை லட்சியம். இதனால், சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஏழை குடும்பத்தை சேர்தவரான மாணவர் நவீன் கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாததால் வங்கியில் கல்வி கடன் பெறலாம் என திட்டமிட்டுள்ளார். அதன்படி ஆரணி பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்துள்ளார்.
கல்வி கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நவீன் தனது படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். ஆனால் நவீன் படிக்கும் மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு படிப்பு முடித்த பிறகு வேலை கிடைப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யாத காரணத்தை கொண்டு இந்தியன் வங்கி நவீனின் விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதையடுத்து, இந்தியன் வங்கியை எதிர்த்து மாணவர் நவீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, இது போன்ற காரணங்களுக்காக மாணவர்களின் கல்வி கடனை நிராகரிக்க கூடாது என நீதிமன்றங்கள் பல முறை உத்தரவிட்டும் இந்தியன் வங்கியின் இந்த செயல் கண்டனத்திற்கு உரியது என நீதிபதி தெரிவித்தார்.
அரசியல்வாதிகளின் சிபாரிசில் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெறுபவர்கள் பின்னர் கடனை செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடுவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்தியன் வங்கியன் இந்த செயலுக்கு 1 லட்சம் வரை அபராதம் விதித்திருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி வைத்தியநாதன், இனி வரும் காலங்களில் இது போன்று செயல்பட மாட்டோம் என வங்கி தெரிவித்ததையடுத்து அபராதம் விதிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், மாணவர் நவீனுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
கல்வி கடன் வழங்க மறுத்த இந்தியன் வங்கிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்..!
சார்ந்த செய்திகள்
Next Story
'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்
தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது' எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
Next Story
31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி
போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.