சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 கூடுதல் நீதிபதிகளுக்கும், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளி சங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை, சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 பேருக்கும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் சென்னையில் இருந்த நீதிபதிகளும், மதுரையிலிருந்த நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற நீதிபதிகளை, அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் சுந்தரேசன், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் வரவேற்றுப் பேசியதுடன், முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். புதிய நீதிபதிகளின் நியமனங்கள் மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்து, காலியிடங்கள் 12 ஆகக் குறைந்துள்ளது.
ஏற்கனவே, நீதிபதிகள் புஷ்பா சத்தியாநாராயணா, வி.எம்.வேலுமணி, நிஷா பானு, அனிதா சுமந்த், பவானி சுப்பராயன், தாரணி, கிருஷ்ணவள்ளி, ஹேமலதா, ஆஷா ஆகிய 9 பெண் நீதிபதிகள் உள்ள நிலையில், தற்போது பதவியேற்ற நீதிபதிகள் ஆனந்தி, கண்ணம்மாள், மஞ்சுளா, தமிழ்ச் செல்வி ஆகிய 4 பேரையும் சேர்த்து பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நீதிபதி முரளிசங்கர் மற்றும் நீதிபதி தமிழ்ச்செல்வி ஆகியோர் தம்பதியர். இந்திய நீதித்துறையில் கணவனும் மனைவியும் பொறுப்பேற்பது, இரண்டாவது முறையாகும். ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நடந்துள்ளது.