மாநிலம் மதுவில் மூழ்கியுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை தெரிவித்துள்ளது.
மதுரை தட்டான்குளம் மேலூர் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றுமாறு தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் உத்தரவிடக் கோரி தாஹா முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில், ‘தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை’ என வேதனை தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, “தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள். மதுவிலக்கை அமல்படுத்துவதால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும், குடிமகன்களின் உடல்நிலை ஆரோக்கியமடையும்,” என அறிவுரை வழங்கியுள்ளது.