கடலூர் அருகே வெள்ளகரை ஊராட்சிக்குட்பட்ட கொடுக்கன்பாளையம், மலையடிகுப்பம், பெத்தாங் குப்பம், கீரப்பாளையம், காட்டாரசாவடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 5 தலைமுறைகளாக அரசு தரிசு நிலத்தில் வேளாண் பயிர் செய்து ஆண்டு அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் வேளாண் பயிர் செய்து வரும் முந்திரி மரங்கள்உள்ளிடட மா, பலா, வாழை உள்ளிட்ட அனைத்து பணப்பயிர்களையும் கிட்டத்தட்ட 9 ஆயிரம் மரக்கன்றுகளை அழித்து அங்கு காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைக்க சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுக்கன்பாளையம் பகுதியில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர் பகுதியில் உள்ள 12,000க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் 140 ஏக்கரில் ரூ 75 கோடியில் தோல் இல்லாத காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்துச் சென்றார்.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் மலையடிகுப்பம் கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை அமைக்கக்கூடாது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் பொது மக்களையும் விவசாயிகள் சங்கத்தினரை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கினை இன்று (18.07.2025) அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மன்றம் அப்பகுதியில் காலணி ஆலைக்கு நிலம் எடுக்கவும் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் முடிவெடுக்கும் வரை விவசாயிகளை வெளியேற்றக் கூடாது. விவசாயிகளுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்ய 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். தமிழக முதல்வர் அறிவித்துச் சென்ற திட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலனி தொழிற்சாலை அமைக்காமல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.