Published on 21/07/2018 | Edited on 21/07/2018

கல்லூரி நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் விதிக்கப்பட்ட 2 லட்சம் அபராத தொகையை, சென்னையில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் உள்ள உடற்பயிற்சி கல்லூரி ஒன்றின் 2016 - 17ஆம் ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுத தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. அந்தக் கல்லூரியை சேர்ந்த 58 மாணவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி மறுத்த முடிவை ரத்து செய்யவும், தேர்வு எழுத அனுமதி கோரியும் 58 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது "ஆவணங்களை பரிசீலித்தபோது, கல்லூரிக்கு வந்ததற்கான முறையான வருகைப்பதிவு இல்லை என்பதும், அதை சரிகட்டுவதற்காக மாணவர்களுடன், கல்லூரி நிர்வாகமே முறைகேடுகளில் ஈடுபட்டதை நீதிபதி கண்டறிந்துள்ளார். இதற்காக கல்லூரி நிர்வாகம் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், 58 மாணவர்களும் கூட்டாக சேர்ந்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.
அந்த அபராதத் தொகை இரண்டு லட்ச ரூபாயை, சென்னையில் பாலியல் வன்கொடுமையால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்காக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.