Skip to main content

வெட்டி வேரில் மூலிகை மாஸ்க்... ஈரோட்டில் புதுமை!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
 Herbal Mask at Cut Root ... Erode Innovation!

 

மாஸ்க் போடாத மனிதர்களை இனி பார்க்க முடியாது என்ற நிலையை கொண்டு வந்து விட்டது கொடுங்கோல் கரோனா வைரஸ். அப்படிப்பட்ட அந்த மாஸ்க்குகளிலும் புதுமைகளான வரவுகள் வந்து கொண்டிருக்கிறது.

 

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதார துறையும் இணைந்து பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது குறிப்பாக முகத்தில் மாஸ்க் அணியாமல் வரும் நபர்கள் மீது காவல்துறை மற்றும் சுகாதார துறையினர் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. கரோனா பீதியாலும், அபராதம் கட்ட வேண்டும் என்ற பயத்தாலும் பொது மக்கள் பெரும்பாலும்  மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்த மாஸ்க் வகைகளில் மூன்று லேயர் கொண்ட மாஸ்க், அடுத்து என் 95 மாஸ்க் மேலும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாஸ்க் அதேபோல் சாதாரண துணிகளில் உருவாக்கப்படும்  மாஸ்க் வகைகள் என எல்லாமே விற்பனைக்கு உள்ளது. இந்த நிலையில் மூலிகை மாஸ்க் தயாரிப்பும் அதன் விற்பனையும் ஈரோட்டில் நடந்து வருகிறது.

 

 Herbal Mask at Cut Root ... Erode Innovation!


இது சம்பந்தமாக மூலிகை மாஸ்க் உருவாக்கும் பெண் ஒருவர் கூறுகையில், "இந்த வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் எல்லா ஊர்களிலும் பல வகையான மாஸ்க் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல மாஸ்க்குகளில் சுவாசக்கோளாறு, வயதானவர்கள் மாஸ்க் அணிவிப்பதில் சிரமம் ஏற்படுவதை நாங்கள் கருத்தில் கொண்டு புதுமையாக வெட்டிவேர் நிரப்பி, மூலிகை மாஸ்க்காக இதை தயாரிக்கிறோம். இந்த மாஸ்க்குகள் மூன்று நாட்கள் வரை பயன்படுத்திய பிறகு, உள்ளே உள்ள வெட்டிவேரை நீக்கிவிட்டு மாஸ்க்கை தண்ணீரில் அலசிக் காயவைக்க வேண்டும் பிறகு புதிய வெட்டிவேரை உள்ளே இணைத்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது மாஸ்க்கை துவைத்து காயவைத்து, மீண்டும் வெட்டிவேரைப் போட்டு பயன்படுத்தலாம். ஒரு வெட்டிவேர் மாஸ்க்கின் விலை ரூபாய் 75. இது உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. முதியவர்கள், சுவாசக்கோளாறு உள்ளவர்கள் மட்டுமில்லாமல் எல்லோரும் இதை எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்," என்றார்.

வெட்டி வேரு வாசம்... இனி மக்கள் முகங்களில் நேசம்...

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.