HEAVY RAINS TAMILNADU AGRICULTURAL LANDS CM FUND ANNOUNCED

ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத்தை அறிவித்தார்.

Advertisment

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூபாய் 1,116 கோடி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 11.43 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி நிவாரணம் தரப்படும். 6.81 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண், தோட்டக் கலை பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மழையால் 6.62 லட்சம் ஹெக்டேர் வேளாண், 18 லட்சம் ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் நிவாரணமாக ஏற்கனவே ரூபாய் 543.10 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஜனவரியில் பெய்த கனமழை பாதிப்புகளை சரிசெய்ய ரூபாய் 900.82 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மானாவாரி, நீர்ப்பாசன வசதிப் பெற்ற நெற்பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்துப் பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 10,000 ஆக நிவாரணம் உயர்த்தப்பட்டுள்ளது. பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூபாய் 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்தியக் குழு பிப்ரவரி 3, 4, 5-ல் மீண்டும் பார்வையிடுகிறது.

ஜனவரி மாதத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 12.3 மி.மீ.க்கு பதில் 136.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவைக் காட்டிலும் 1,108 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தின் டெல்டா, தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது’என குறிப்பிடப்பட்டுள்ளது.