தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப நாட்களாகவே ஈரோடு பகுதிகளில் பலத்த மழை பொழிந்து வருவதால் குண்டேரிபள்ளம் அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணைக்கு வரும் 600 கன அடி நீரானது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீரால் வினோபா நகர், தோப்பூர், கெங்கர்பாளையம், மோதூர், வாணி புத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது வரை நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.