கனமழை தொடர்வதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ட்விட்டர் பதிவில், 'தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம், அவ்வாறு பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.