தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தேனி, கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோலியானுர், விழுப்புரம் பகுதிகளில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், வளவனூரில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடலுக்கு 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.