Skip to main content

சேலத்தில் கனமழையால் குடிசை வீடுகள் இடிந்து 2 மூதாட்டிகள் பலி

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Heavy rain two old ladies passed away

 

சேலம் மாவட்டத்தில் பெய்த கன மழையால் குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் இரண்டு மூதாட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னன். இவருடைய மனைவி சீரங்காயி (80). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் சீரங்காயி மட்டும் தனியாக ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார். அப்பகுதியில் வசிக்கும் உறவினர்கள் சிலர் அவருக்கு உணவு வழங்கி வந்துள்ளனர். 

 

இந்நிலையில், அக். 16ம் தேதி இரவு பனைமரத்துப்பட்டியில் பெய்த பலத்த மழையில் சீரங்காயி வசித்து வந்த குடிசை வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த மூதாட்டி படுத்திருந்த கட்டில் மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திங்கள்கிழமை (அக். 17) காலையில் அக்கம் பக்கத்தினர் எழுந்து பார்த்தபோது சீரங்காயி வசித்து வந்த குடிசை வீடு இடிந்து கிடப்பதும், சுவர்களின் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி பலியாகி இருப்பதும் தெரிய வந்தது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த பனைமரத்துப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினரும் விசாரித்து வருகின்றனர். 

 

மற்றொரு சம்பவம்: 

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி மேட்டுத்தெரு பெரியார் படிப்பகம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி ராணி (65). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குமார் இறந்துவிட்டார். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ள நிலையில், ராணி மட்டும் தனியாக வசித்து வந்தார். அக். 16ம் தேதி இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கன மழையால் ராணி வசித்து வந்த வீட்டின் மண் சுவர்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி அவர் உயிரிழந்தார். இடைப்பாடி காவல்நிலைய காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்