Skip to main content

திடீரென கொட்டித் தீர்த்த கோடை மழை; முறிந்து விழுந்த மரங்கள்!

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

heavy rain tirupattur

 

கோடை மாதம் எனப்படும் மே மாதம் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதலே கடுமையான வெயில் தமிழ்நாட்டில். காலை 11 மணி முதல் மதியம் 4 மணிவரை பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஏப்ரல், மே மாதங்களில் அதிகரிக்கவேண்டிய வெயில் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே அதிகரித்துள்ளது.

 

இதையடுத்து கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பொழிகிறது. சில தினங்களுக்கு முன்பு ஆலங்கட்டி மழை பெய்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் பெட்ரோல் பங்க் மேற்கூரை மற்றும் குடிசைகள் காற்றில் பறந்தன.

 

heavy rain tirupattur

 

இந்நிலையில் இன்று(14.4.2022) மாலை திடீரென காற்றுடன் கூடிய மழை வீசியதில் சாலையோர மரங்கள் பல கீழே விழுந்தன, மின்கம்பங்களும் கீழே விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார்  2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மரங்களை மக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். அதேபோல் மின்வாரியத்தினர் கீழே விழுந்த கம்பங்களை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

 

இந்த கோடை மழை வெக்கையை உருவாக்கும், கோடைக்கால நோய்களை உருவாக்கும் என்பதால் பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் கவனமாக இருக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.