rain

வானிலை மாற்றம் காரணமாக அரபிக்கடல் பகுதியில் மினிக்காய் தீவுப்பகுதியில் கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது,

Advertisment

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து மினிக்காய் தீவுக்கு தென்கிழக்கில் 50 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவனந்தபுரத்தில் இருந்து தென்மேற்கு திசையில் 380 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, கேரளாவின் தெற்கு பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் தொடர்ந்து 16-ந் தேதி காலை வரை மணிக்கு 45 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதன் காரணமாக அந்த பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என அவர் கூறியுள்ளார்.