அதே சமயம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வலுவான வடகிழக்கு காற்று மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் மழைக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று (28.12.2023) முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யக்கூடும். மேலும் சென்னையைப் பொறுத்தவரையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.