![Heavy rain likely in 10 districts today Meteorological Department](http://image.nakkheeran.in/cdn/farfuture/oXncduF0rqm36l1mBA5ASKg3WeG03K-D0ZbCUmf0kUU/1700472347/sites/default/files/inline-images/rain-puyal-1_0.jpg)
தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (20.11.2023) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை (21.11.2023) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (22.11.2023) தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.