Heavy rain echoes; Holiday for four taluk schools

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (19.07.2024) அதி கனமழை பெய்யக்கூடும். அதாவது 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ஓரிரு இடங்களில் இன்று 12 செ.மீ. முதல் 20 செ. மீ. வரை மிக கனமழை பெய்யக்கூடும். அதோடு திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூரில் நாளை (20.07.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீலகிரியில் இன்று நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளையும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரியில் நாளை நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின் படி உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.