Skip to main content

திடீரென இறந்துபோன 'ராவணன்' காளை! - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

ravanan ox

 

2020 ஜல்லிக்கட்டில், அவனியாபுரம் முதல் அலங்காநல்லூர் வரை களத்தில் நின்று கலக்கிய காளை 'ராவணன்'. இது புதுக்கோட்டை எஸ்.ஐ, அனுராதாவின் காளை. இந்தக் காளை பற்றி ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை பேச்சாக இருந்தது. இந்த காளை ராவணன், எஸ்.ஐ அனுராதாவுக்கு எப்படி வந்தது. அதன் பின்னணி என்ன?

 

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா பளு தூக்கும் வீராங்கனை. காமன் வெல்த் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை சென்று நூற்றுக்கணக்கான பதக்கங்களைக் குவித்தவர். அவருடைய அண்ணன் மாரிமுத்து படிப்பை துறந்து கூலி வேலைசெய்து அனுராதா இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளார். விளையாட்டில் சாதித்ததால், தஞ்சை மாவட்டம் தொகூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ பணிகிடைத்தது. 

 

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று வந்த அனுராதாவுக்குப் பாராட்டுகள் குவிந்தது. அப்படித்தான் தஞ்சையில் உள்ள வினோத், தன் மனைவியின் தோழியான அனுராதாவுக்கு, தஞ்சை வத்திராயிருப்பில் இருந்த காளையை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். மேலும், 'உனக்கும் இந்த காளை பெருமை சேர்க்கும்' என்று சொல்லி கொடுத்தார். தன் வீட்டுக்கு வந்த காளைக்கு அனுரதாவின் அண்ணன் மாரிமுத்து 'ராவணன்' எனப் பெயர் வைத்து, குடும்பப் பெண்களும் சேர்ந்து வளர்த்தார்கள். மாரிமுத்து தன் காளையான அசுரனுடன், ராவணனுக்கும் பயிற்சி கொடுத்தார்.

 

ravanan ox

 

அனுராதாவுக்கு பரிசாகக் கிடைத்த காளை என்பதால் அவரது பெயரிலேயே அவனியாபுரத்தில் முதன் முதலில் களமிறக்கினார்கள். களத்தில் நின்று விளையாடிய ராவணனை அந்த களமே பாராட்டியது. பின்னர் ஊடகங்களின் பார்வையும் ராவணன் பக்கம் திரும்பியது. 'சிறந்த காளை' என்ற பெயரோடு வீட்டுக்குத் திரும்பினான் ராவணன். அடுத்த நாள் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டில் காலை 8.30 மணிக்கு அனுராதாவின் காளை ராவணன் களமிறங்கி கலக்கியதும் நாள் முழுவதும் ராவணன் பேச்சு ஓடியது.

 

அலங்காநல்லூரின் சிறந்த காளை ராவணன் தான் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால், மாலை முடிவு அறிவித்த போது ரசிகர்கள் துவண்டு போனார்கள். காரணம் ஜெர்சி இனக் காளைக்கு முதல் பரிசும், நாட்டு இனக் காளையான ராவணனுக்கு இரண்டாம் பரிசும் அறிவித்தார்கள். நாட்டினத்தைக் காக்கத்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டமே நடந்தது. ஆனால் அரசின் முடிவு மாற்றி கலப்பினப் பக்கம் போகிறது என்ற சர்ச்சை எழுந்தது. ஆனாலும் அந்த வருடம் மட்டுமின்றி இந்த வருடமும் ராவணன் தமிழகத்தின் அத்தனை பெரிய வாடிவாசலிலும் நின்று கலக்கியது. 

 

இந்த நிலையில், கடந்த வாரம் முரட்டுச் சோழகன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட ராவணன் யாரிடமும் பிடிபடவில்லை. காளையை வளர்த்த தம்பி மாரிமுத்து கூட கயிறு வீசியும் ஒருவாரமாகப் பிடிபடாமல் கிராமங்களில் உள்ள காடுகளில் சுற்றியது. இந்த நிலையில் தான் கிள்ளுக்கோட்டையில் உள்ள ஒரு தைல மரக்காட்டிற்குள் பெரிய புற்றை, கொம்பால் குத்தி உடைத்தது. பின்னர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது.

 

ravanan ox

 

இது குறித்து அனுராதாவின் உறவினர்கள் கூறும் போது, “முரட்டுச் சோழகன்பட்டியில் பிடிபடாமல் தப்பிய ராவணன், பல நாட்கள் காடுகளில் சுற்றி இருக்கிறது. கிள்ளுக்கோட்டை காட்டில் புற்றில் இருந்த நல்லபாம்பு செல்வதைப் பார்த்து ராவணன் பெரிய உயரமான புற்றை தன் கொம்பால் குத்தி உடைத்திருக்கிறது. அப்போது அந்தப் பாம்பு ராவணனை கடித்திருப்பதால், அதே இடத்தில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்து போய் தூக்கி வந்து மாலைகள் அணிவித்து மனிதர்களுக்குச் செய்வது போல அத்தனை சடங்குகளும் செய்தோம். காளை ஆர்வலர்கள், காளைபிடி வீரர்கள், கிராம மக்கள் என அனைவரும் மாலை அணிவித்துச் சென்றார்கள். சாதித்த காளைகளை சாவு தேடி வருவது வேதனையாக உள்ளது. கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது என்றனர். பரிசாக வந்த ராவணன், பரிசுகளை அள்ளிக் குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால், இன்று அதே ரசிகர்கள் கண்ணீரோடு மாலை அணிவித்து வருவதைக் காண வேதனையாக உள்ளது” என்றனர்.

 

மேலும் தனது காளை இறந்ததை அறிந்து பாட்டியாலாவில் பயிற்சியில் இருக்கும் அனுராதா கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.