Skip to main content

கருக்கலைப்பு மருந்து கொடுத்த மருந்தகர் கையும் களவுமாக மாட்டினார் !

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

Health officer who went as customers! Pharmacist caught

 

தனியாருக்கு சொந்தமான மருந்தகத்தில் மருத்துவர்களின் ஆலோசகனைகளோ, அனுமதியோ இல்லாமல் பல்வேறு வியாதிகளுக்கான மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் கருக்கலைப்புக்கான மாத்திரைகளும், உடலுறவு தொடர்பான மாத்திரைகளும் எந்தவித தயக்கமும் இல்லாமல் படு ஜோராகவே விற்பனை செய்கின்றனர்.

 

நாகையில் அப்படி கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டு இரண்டு கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்தது பெருத்த வேதனையை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் வாடிக்கையாளர்களை போல மாத்திரை வாங்க சென்று  உரிமையாளர்களை  கைது செய்துள்ளனர்.

 

நாகையில் சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதற்கு மகப்பேறு மருத்துவர் பரிந்துரையோ, மருத்துவரின் பரிந்துறை சீட்டோ இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்கி சாப்பிட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு சென்ற புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாகை அடுத்த புத்தூரில் உள்ள கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அப்பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் வாடிக்கையாளர் போல சென்று கருக்கலைப்பு மாத்திரை கேட்கவே, 390 ரூபாய் மதிப்புள்ள கருக்கலைப்பு மாத்திரைகளை 2500 ரூபாய்க்கு எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் கண்ணதாசன் விற்பனை செய்துள்ளார். 

 

அப்போது கையும் களவுமாக மருந்தக உரிமையாளர் கண்ணதாசனை பிடித்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள், கடையில் ஆய்வு மேற்கொண்டு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்தக உரிமையாளர் மீது புகார் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

விசாரணை நடந்துவரும் நிலையில், மருந்தகத்தில் மருந்து சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் கருக்கலைப்பு மாத்திரைகளை வாடிக்கையாளர் ஒருவர் வாங்குவது போல வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்