
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர் சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், “கல்லூரி கனவு திட்டம், அந்த திட்டம், இந்த திட்டம் எனக் கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ் செயல்படும் கல்வித் துறை அதிகாரிகள் உயிரை எடுக்கின்றனர்” என விமர்சித்து துறை அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு ஒருமையில் பேசியுள்ளார்.
அரசின் திட்டங்களையும், அரசுப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு எனக் கூறிக் கொண்டு எஸ்.சி. சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து கேள்வி கேட்பது அருவெறுப்பாக உள்ளதாக ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களை இழிவாகப் பேசியும், அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு என்பது தேவையா? என அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் தலைமை ஆசிரியை குற்றம் சாட்டி விமர்சனம் செய்யும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பள்ளியில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பள்ளி மாணவிகளுக்கு வழங்கக்கூடிய நாப்கின் மாணவிகளுக்கு வழங்காமல் பள்ளி மைதானத்தில் தீயிட்டுக் கொளுத்திச் சிதறிக் கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசின் திட்டங்களை விமர்சித்தும் துறை சார்ந்த அதிகாரிகளை ஒருமையில் பேசியுள்ள ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.