Skip to main content

மாணவ, மாணவிகளின் பெற்றோரைச் சந்தித்து தலா ரூ. 1,000 கொடுத்து உதவிய தலைமை ஆசிரியை... 

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

Headmaster help - corona virus issue - ariyalur


தான் பணியாற்றி வரும் பள்ளியில் படித்து வரும் 62 மாணவ, மாணவிகளின் பெற்றோரை நேரில் சந்தித்து தலா 1,000 ரூபாய் வழங்கி உதவி செய்துள்ளார் தலைமை ஆசிரியை ஒருவர். 
 

அரியலூர் மாவட்டம் துப்பாபு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 34 மாணவர்கள், 28 மாணவிகள் என மொத்தம் 62 பிள்ளைகள் படித்து வருகிறார்கள். இவர்களது பெற்றோர்கள் அனைவரும் ஏழை கூலி விவசாயத் தொழிலாளர்கள். அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர்கள். 
 

அந்த கிராம துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் கண்ணகி. இவர் பள்ளிப் பிள்ளைகளின் படிப்பு மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அதேபோன்று ஊர் மக்களிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். இதனால் ஆசிரியை கண்ணகி மீது ஊர் மக்களுக்கு எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். பள்ளிக்கு வந்து பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தோம், வீட்டுக்குச் சென்றோம், மாதம் தோறும் ஊதியம் வாங்கினோம் நம்மையும் நம் பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் காப்பாற்றினோம் என்ற சுயநலமிக்க சில ஆசிரியர்களுக்கு மத்தியில்தான் இந்த தலைமை ஆசிரியையும் இருக்கிறார். தான் பணி செய்யும் ஊரில் உள்ள மாணவ மாணவியின் பெற்றோர்கள் கரோனா பரவல் காரணமாகவும் வேலைக்குச் செல்ல முடியாமலும் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதையும் அவர்கள் படும் சிரமத்தையும் நேரில் கண்டறிந்தார் தலைமையாசிரியை கண்ணகி.
 

பள்ளியில் படிக்கும் 62 மாணவ மாணவியரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக தலா 1,000 ரூபாய் என ரூபாய் 62 ஆயிரம் வழங்குவது என்று முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு மாணவ மாணவியரின் வீடுகளுக்கும் அவரே நேரில் சென்று பிள்ளைகளின் பெற்றோர்களிடம் பணத்தைக் கொடுத்தோடு மட்டுமல்லாமல் கரோனா நோய் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார்.
 

http://onelink.to/nknapp

 

தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக்கொடுப்பதோடு, வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானத்திற்கு வழியில்லாமல் இருக்கும் கரோனா காலத்தில் உதவியும் செய்த ஆசிரியை கண்ணகிக்கு கிராம மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.  

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் காட்டிய தலைமை ஆசிரியர்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
headmaster arrested under POCSO Act in Coimbatore

கோவையில் ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் ஆபாசப் படங்களைக் காட்டிய தலைமை ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன் புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (44). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம்  அப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடமும் தனது  செல்போனில் ஆபாச வீடியோவை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் பிராங்க்ளின் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதனிடையே பிராங்க்ளினை தலைமை ஆசிரியர் பதிலிருந்து பணியிடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.