



தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக பல மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி, கட்டுக்குள் வந்ததன் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில், நேற்று (15.11.2021) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தொரவி ஊராட்சியில் உள்ள தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவர்களைத் தலைமை ஆசிரியர் செல்லையா உள்ளிட்ட ஆசிரியர்கள் மேள தாளங்களுடன் வரவேற்றனர். மேலும், புதிதாக கட்டப்பட்டிருந்த இரண்டு வகுப்பறை கட்டடங்களை சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனபால், வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர்களின் வரவேற்பில் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.