
விருதுநகரில் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற 62 வயது முதியவர் தீயணைப்புத்துறையினரால் போராடி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 62 வயதான முதியவர் ஆண்டார். ஆண்டார் அவரது மகன் மற்றும் மருமகளுடன் வசித்துவந்த நிலையில் சிலநாட்களாக குடும்பத்தில் சண்டை சச்சரவு என மன உளைச்சலில் ஆண்டார் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த ஆண்டார்வடுகர்கோட்டை ராமசாமி நாயக்கர் தெருவிலிருந்த கிணறு ஒன்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் உடனே எழுந்துநின்ற ஆண்டார் கிணற்றிலிருந்த பாறை மீது சோகத்தில் சாய்ந்து நின்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கிணற்றுக்குள் இருந்து சத்தம் வர அதிர்ந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றில் எட்டிப்பார்த்தபொழுது முதியவர் கிணற்றிலிருந்ததைக் கண்டு அதிர்ந்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் வலையை உள்ளே செலுத்தி முதியவர் ஆண்டாரை வெளியே எடுத்தனர். உடனே அவருக்குத் தேநீர் வாங்கி கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்திய தீயணைப்புத்துறையினர் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
Follow Us