
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. அதன்படிஎம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 28 ஆம் தேதி செந்தில் பாலாஜி ஆஜரானார்.
ஏற்கனவே சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை பெரிய இரும்புப் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. 28 ஆம் தேதி ஆஜரான அவரிடம் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட 3,000 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் வேண்டுமென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்திய சிறப்பு நீதிமன்றம், முடிய இருந்த அவருக்கான நீதிமன்றக் காவலை செப்.15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து முதன்மை நீதிமன்றத்தை நேற்று செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக நாடியது. அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே ஜாமீன் மனுவை விசாரிக்கும் என அறிவுறுத்தியது. இன்று மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அருண், பரணி ஆகியோர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் சிறப்பு நீதிமன்றமோ, உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என முடிவெடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதி ரவி தெரிவித்துவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)