கரோனா தொற்று குறித்த முழுமையான புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட உத்தரவிடக்கோரி திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், கரோனாவுக்கு பலியானவர்கள் பற்றிய விவரங்களைச் சுகாதாரத் துறை வெளியிட்டு வருகிறது. நூறு நாட்களுக்கு மேல் இந்த விவரங்களை வெளியிட்ட போதும், அவை முழுமையான வகையில் இல்லை எனக் கூறி, மாவட்ட வாரியாக முழுமையான தகவல்களை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரை மத்திய தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், போதுமான விவரங்கள் இ்ல்லாவிட்டால் ஆய்வு முடிவுகள் தவறாகக்கூடும். முழுமையான தகவல்களை வெளியிடாவிட்டால் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பலன் தராது. மதுரை மாவட்டத்தில், கடந்த ஜூலை மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுநாள்வரை, அங்கு தொற்றைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், திறமையானதாக இல்லை என்பதையே நிரூபிக்கிறது. முழுமையான தகவல்களை வெளியி்ட்டால்தான், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
குறைபாடுடைய மற்றும் மறைக்கப்பட்ட தகவல்கள், கரோனா நோய் குறித்த பெருத்த சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் உள்ளன. ஒரு பகுதியில் முழு ஊரடங்கையும், மற்றொரு பகுதியில் எளிதான விதிமுறைகளுடனும் அமல்படுத்துவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டிச் செல்வதும், சரக்குகளைப் பதுக்குவதும், கரோனா பரப்புவதற்குக் காரணமாகிவிட்டது.
பலி எண்ணிக்கையை வைத்துத்தான் ஒரு நோயின் தீவிரத்தைக் கணிக்க முடியும் என்ற நிலையில், கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை மறைத்துள்ளனர். ஒரே நாளில் 460 பேர் பலி என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளைப் பின்பற்றவில்லை.
கரோனாவைக் குணப்படுத்துவதற்கான மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டிபிடிக்கப்படாத நிலையில், கரோனாவின் தாக்கத்தை முழுமையாக அரசு வெளியிட்டால்தான், தனிமைப் படுத்திக்கொள்வது, தனிமனித விலகல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிப்பது குறித்து மக்கள் விழிப்புணர்ச்சி அடைவார்கள்.
மாவட்ட வாரியாக தொற்று பாதித்தவர்கள், பலியானவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கரோனா தொற்று குறித்த விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தமிழக அரசு வெளியிட்டு வருவதாகவும், மனுதாரர் தி.மு.க எம்.எல்.ஏ. என்பதால், தமிழக அரசு மீது பொய்க் குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரோனா பாதிப்பு குறித்த விவரங்களைத் தொலைக்காட்சிகளில் தமிழக அரசு வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் விளக்கத்தை மூன்று வாரங்களில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.