Skip to main content

மகளை பலாத்காரம் செய்தாரா? மடியில் போட்டு அழுதாரா?  - தந்தையின் தூக்கு தண்டனை ரத்து

Published on 12/06/2018 | Edited on 12/06/2018
seeni

 

ராமேஸ்வரத்தில் 9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தந்தைக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


ராமேஸ்வரம் கரையூர் பகுதியை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து(51).இவரது மனைவி தனுஷ்பானு. கடந்த 2013 ஆம் ஆண்டு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தனுஷ்பானு, தனது 9 வயது மகளையும்,மகனையும் கரையூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில்  தங்கவைத்திருந்தார். 

 

இந்நிலையில், கடந்த 23.4.2013-ல் மாரிமுத்துவின் 9 வயது மகள் ராமேஸ்வரம் கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ராமேஸ்வரம் கோவில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

 

பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதன் பின்னர் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றினர்.

 

இந்நிலையில்  மகளை பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை கடலில் வீசியதாக 3 ஆண்டுக்கு பிறகு மாரிமுத்துவை போலீஸார் கைது செய்தனர்.

 

இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி மாரிமுத்துவுக்கு கடந்த .2017ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

 

பின்னர் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு விசாரித்தது.

 

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டார். இவர் வாதிடுகையில்,  சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுக்கு பிறகே மனுதாரரை கைது செய்து போலீஸார் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். சாட்சிகள் மனுதாரர் கடற்கரையில் தனது மகளை மடியில் போட்டு அழுதுக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதை வைத்து அவர் தான் மகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார்.

 

இதையேற்று மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்