Skip to main content

''இதுவரை இரண்டு முறை தடைப்பட்டு போய்விட்டது''-ஓபிஎஸ் பேட்டி

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

"Has been blocked twice" - OPS interview

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

இந்நிலையில் தேவரின் சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் பத்தரை கிலோ எடை கொண்ட வெள்ளிக்கவசத்தை தேவர் நினைவிடத்தின் பொறுப்பாளரான காந்தி மீனாள் நடராஜனிடம் வழங்கினார்.

 

அதன் பிறகு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓபிஎஸ், 'எதன் சார்பாக இந்த வெள்ளி கவசம் வழங்கப்பட்டது என்ற' கேள்விக்கு, 'அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். அந்த அடிப்படையில் அதிமுக சார்பில் வெள்ளிக் கவசத்தை வழங்கி இருக்கிறேன். அதிமுக சார்பில் வெள்ளிக்கவசத்தை அறக்கட்டளையில் ஒப்படைத்து விட்டோம். ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு 13 கிலோ தங்கக் கவசத்தை குருபூஜை நடக்கின்ற நன்னாளில் சாத்தப்பட வேண்டும் என்று அப்பொழுது பொருளாளராக இருந்த என்னையும், இத்திருக்கோவிலின் அறங்காவலராக இருக்கக்கூடிய பெரியம்மா காந்தி மீனா அவர்களையும் நியமித்திருந்தார்கள்.

 

அதனடிப்படையில் இதுவரை தங்கக் கவசத்தை இங்கு கொண்டுவந்து  தேவர் சிலைக்கு சாற்றிவிட்டு குருபூஜை நிறைவடைந்த உடன் எடுத்துச் சென்று வங்கியில் வைக்கக்கூடிய பழக்கம் இருந்தது. 2017 ஆம் ஆண்டும், இந்த ஆண்டும் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்வு தடைப்படுகிற சூழல் ஏற்பட்டது. இதனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கின்ற நான், 'கலெக்டரிடம் இந்த தங்கக் கவசத்தை கொடுத்து குருபூஜைக்கு எந்த ஒரு இடையூறும் வராமல் எப்பொழுதும் போல் தங்கக் கவசம் தேவர் சிலைக்கு சாற்றப்பட வேண்டும்' என்று ஏற்கனவே 25 தினங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்து விட்டோம்.

 

அந்த கடிதத்தின் அடிப்படையில் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் சீனிவாசன் தற்காலிக பொருளாளர் என்று சொல்லிக்கொண்டு அவர்தான் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு எடுத்துச் சென்றார். அந்த வழக்கை நாங்களும் எதிர்கொள்கின்ற சூழல் ஏற்பட்டது. நாங்கள் நீதிமன்றத்தில் சொன்னோம் 'எந்த தாமதமும் இல்லாமல் தங்கக் கவசம் செல்ல வேண்டும் அதுதான் முறையான செயலாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். ஆகவே இங்கே மாவட்ட நிர்வாகத்திடம் தங்கக் கவசத்தை தந்து அவர்களே எடுத்துக் கொண்டு அறக்கட்டளையினுடைய தலைவராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய காந்தி மீனாவிடம் தந்து தங்கக் கவசத்தை குருபூஜையில் வைத்து சிறப்பிக்க வேண்டும். அதேபோன்று மீண்டும் வங்கியில் வைப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் கொடுத்து விட்டோம்' என்று.

 

அவர்கள் எங்களிடம்தான் தர வேண்டும் என்று வழக்கு போட்டார்கள். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. எங்களுடைய கோரிக்கையில் இருக்கின்ற நியாயத்தை உணர்ந்து அந்த தங்கக் கவசம் அறக்கட்டளையின் தலைவரிடமும், மாவட்ட நிர்வாகத்திமும் தர வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதேபோல் அதிமுக சார்பாக இன்று வெள்ளிக்கவசம் தந்திருக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.