திருப்பூரில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றில் வடமாநில இளைஞர் ஒருவர் அனுமனைப் போல சைகையில் ஈடுபட்டது கோவிலில் இருந்த பக்தர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஊட்டியது. அதனைப் பலரும் செல்போன்களில் படம் பிடித்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அழகுமலை பகுதியில் உள்ளது முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில். இந்தக் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அதே கோவில் பகுதியில் காரிய சித்தி ஆஞ்சநேயர் என்ற ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது.
ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காட்டி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த பொழுது மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்திருந்த வட மாநில இளைஞர் ஒருவர் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த தேங்காயை பல்லாலேயே மட்டையை உரித்து குரங்கு போலவே செய்கை காட்டினார். புரியாத ஏதோ ஒரு பாஷையில் பேசிக்கொண்டு மடமடவென பற்களால் தேங்காய் மட்டையை உரித்த அந்த இளைஞர், தனது தலையிலேயே தேங்காயை உடைத்து தனக்குத்தானே தேங்காய் குளியல் அபிஷேகம் செய்துகொண்டார். மேலும் தேங்காயை பற்களால் கீறி குரங்கு போல் சாப்பிட்டார். அங்கிருந்தவர்கள் 'ஆஞ்சநேயர் வந்திருக்கிறார்' என வினோதமாக திகைத்து நின்று, கையில் இருந்த செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அங்குமிங்கும் ஓடிய அந்த இளைஞர் ஆஞ்சநேயர் போலவே சைகை செய்ததால் பரவசம் அடைந்த பக்தர்கள், ஆச்சரியத்துடன் பார்வையை அங்கும் இங்கும் நகர்த்தாமல் உறைந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.