Skip to main content

சோதனைச் சாவடி நுழைவுக் கட்டணம் கையாடல்; பணியாளர் டிஸ்மிஸ்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

Handling of check post entry fees; Employee Dismissal

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிக்க வனத்துறை சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்களுக்கு பண்ணாரி வன சோதனைச் சாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களுக்கு ஆசனூர் அருகே காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

இந்த வாகனங்களுக்கு முறையே கட்டணமாக ரூ. 20 முதல் ரூ. 50 என வசூலிக்கப்பட்டு புலிகள் காப்பக அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சோதனைச் சாவடிகளும் முக்கிய போக்குவரத்து பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 750 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் ஆசனூர் வனச்சரக அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராக பணிபுரியும் ஒங்கல்வாடி கிராமத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜனா மூர்த்தி (28) காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்து வந்தார்.

 

இந்நிலையில் காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் வசூலிக்கப்பட்ட வாகனங்களின் நுழைவுக் கட்டணம் சரிவர சம்பந்தப்பட்ட வங்கிக்கு செலுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளதாக ஆசனூர் வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது இந்த முறைகேடு நடந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்தபோது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜனா மூர்த்தி வன சோதனைச் சாவடியில் தினமும் வசூல் ஆகும் வாகன நுழைவுக் கட்டண பணத்தை அங்குள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இதில் சில நாட்கள் வங்கியில் பணத்தை செலுத்தாமல் போலியாக வங்கி சலானை பணம் செலுத்தியது போல் சீல் வைத்து அலுவலக கோப்புகளில் பணம் செலுத்தியது போல் எழுதி வைத்திருந்ததும் தெரியவந்தது.

 

இவ்வாறாக அவர் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் பணம் கையாடல் செய்தது தெரிய வந்தது. இது தவிர வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம், வன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதமாக விதிக்கப்படும் கட்டணங்களையும் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர் ஜனா மூர்த்தி பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது வனத்துறையினர் ஆசனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.