
நீதிமன்றத்தைத் தரக்குறைவாக விமர்சித்த சம்பவம் தொடர்பான வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா மீதான குற்றப்பத்திரிகை நகல் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி விழா மேடை அமைத்து பேசுவது மற்றும் விழாவிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான சம்பவத்தில் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நீதிமன்றத்தைத் தரக்குறைவான வார்த்தையால் ஹெச். ராஜா விமர்சித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் 2018ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மேடை அமைத்து பேச காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்போதைய பாரதிய ஜனதாவின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா நீதிமன்றத்தை இழிவானசொற்களால் விமர்சித்ததாகவும் அதுகுறித்து திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெச். ராஜா மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிகைநகலை அரசுத் தரப்பு தாக்கல் செய்தது. திருமயம் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கும் என அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால், ஹெச். ராஜா காரைக்குடியில் உள்ள நிலையில், குற்றப்பத்திரிகை நகலில் தலைமறைவு என காண்பிக்கப்பட்டுள்ளது என மனுதாரரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Follow Us