முன்தினம் வரை ஒரே தட்டில், எச்சிலைப் பகிர்ந்து சாப்பிட்டவனைக் கூட மறந்து இவர்கள் இந்துக்கள், இவர்கள் இஸ்லாமியர்கள், இவர்கள் கிறித்தவர்கள் என அருகிலிருப்பவனையே வேற்று மதத்தாராக, அண்டை நாட்டானாக அடையாளம் காண்பிக்கப்படுகின்றது எனில் அது பா.ஜ.க. ஆட்சியில் தான். பர்தா அணிந்தவரெல்லாம் தீவிரவாதி என்பது போல் இருக்கின்றது பா.ஜ.க. ஆட்சியில்..! மேடை தோறும் வீரவசனம் பேசி மிரட்டும் ஹெச்.ராஜாவிற்கு சமீபத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா மீது.! ஏன்..? எப்படி..?.!!
பா.ஜ.க.தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் வீடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ளது. பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்ணொருவர் கடந்த இரு நாட்களாக இவரது அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஹெச்.ராஜாவினைத் தேடி நடையாய் நடந்திருக்கின்றார். இறுதியில் வியாழனன்று இரவு வேளையில் தனியார் உணவு விடுதியில் உணவருந்திய நிலையில், 50க்கும் மேற்பட்ட காரைக்குடி துணைச்சரக போலீஸாரால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்காக அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றார். "இரண்டு நாட்களாக பர்தா அணிந்த பெண் அலுவலகத்திற்கு ஹெச்.ராஜாவினைத் தேடி வந்தது. பெயர் கூட சொல்ல மறுத்தார். அத்துடன் ஹெச்.ராஜாவின் வீட்டிற்கும் சென்றதுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது." என பர்தா பயத்தோடு காரைக்குடி காவல்துறைக்கு, ஹெச்.ராஜா தரப்பிலிருந்து வந்த ஓலையே இந்த விசாரணைக் கைது.
"அவருக்கும், அவருடைய கட்சியினருக்கும் பர்தாவைக் கண்டாலே பயம்.! பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்ணின் தந்தையும் ஹெச்.ராஜாவும் முன்பு நண்பர்களாம். கணவனிடமிருந்து பிரிந்து வாழும் இந்தப் பெண், தந்தையும் இல்லாத சூழலில் அவருடைய நண்பரான ஹெச்.ராஜாவினைத் தேடி உதவிக்காக சென்றிருக்கின்றார். அது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதன் விளைவே போலீஸாரின் இந்த நடவடிக்கை. பா.ஜ.க.ஆட்சியில் பர்தா அணிந்தால் தீவிரவாதியா என்ன..?" என்கிறார் காவல்துறை நண்பர் ஒருவர். அவரது கேள்வி நியாயமானது தானே..?