Skip to main content

'உலக நாயகனுக்கு உலக அறிவு இல்லை' - கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த எச்.ராஜா!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

தேனி மாவட்ட பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசும்போது, "உள்நாட்டு போரை உருவாக்க வேண்டும் என்று சில அமைப்புகள் போராட்டம் என்ற பெயரில் வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரித்திரம் படிக்காதவர்களால் சரித்திரம் படைக்க முடியாது.

 

H raja about actor kamal

 



ஆனால் தமிழக அரசு பாடப்புத்தகத்தில் பல்வேறு தவறான தகவல்கள் உள்ளன. பாடப்புத்தகத்தில் 'இந்தியா என் தாய் நாடு' என்று இருந்த உறுதிமொழி 'இந்தியா என் நாடு' என்று மாற்றப்பட்டுள்ளது.  இது அமைச்சருக்கு தெரியுமா? என்றால் தெரியாது. ஏனெனில், மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரி அறிவித்தபோது, அமைச்சர் தனக்கு தெரியாது என்று சொன்னார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை இலங்கை தமிழ் அகதிகளுக்கு எதிரானது என்று சொல்வது உண்மையில்லை. ஆனால், உலக நாயகன் என்று ஒருவர் (கமல்ஹாசன்) உலக அறிவே இல்லாமல் இருக்கிறார். அவர் கேட்கிறார், இலங்கை தமிழர்கள் எல்லாம் இந்து இல்லையா? அவர்களை ஏன் சேர்க்கவில்லை? என்கிறார். அனாவசியமாக புண்ணை கிளறாதீர்கள். நான் உண்மையை எல்லாம் எடுத்துச் சொன்னால் இருக்கிற பெயரும் போய்விடும்.

 



அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க அரசியல் சாசனத்தில் இடம் இல்லை. அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் இந்தியா ஒப்பந்தம் போட வேண்டும். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கினால் இலங்கை குடியுரிமை ரத்தாகி விடும். அப்படி ரத்தானால் இலங்கையில் உள்ள அவர்களின் சொத்துக்களை அரசே எடுத்துக் கொள்ளும். 

இதனால் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக அமித்ஷா கூறி இருக்கிறார். துக்ளக் விழாவில் நண்பர் ரஜினிகாந்த் ஒரு கருத்தை சொன்னார். 1971-ல் சேலத்தில் நடந்த ஊர்வலம் குறித்து பேசினார். ஈ.வே.ரா.வின் பெயரை அவர் கூறவில்லை. ஆனால், ரஜினிகாந்த், ஈ.வே.ரா.வை பேசிவிட்டார் என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருந்து இருக்க வேண்டும்" என்றார். பொதுக்கூட்டத்துக்காக பெரியகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.