Skip to main content

பாக்கு மட்டைக்குள் பதுக்கி கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் குட்கா பறிமுதல்!!!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018
gutka



சேலத்தில், கண்டெய்னர் லாரியில் பாக்கு மட்டைக்குள் பதுக்கிக் கடத்தி வரப்பட்ட குட்கா உள்ளிட்ட 15 லட்சம் ரூபாய் போதைப் பொருள்களை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


நாடு முழுவதும் பான் மசாலா, புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற பொருள்கள் விற்பனை செய்வோர் மீது உணவுப்பாதுகாப்புத்துறை, காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், போதை பொருள்கள் கடத்துவதும், பதுக்கி விற்பதும் குறைந்தபாடில்லை. 


இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 25, 2018) அதிகாலையில், சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள், ஓமலூர் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 


அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த புதிய கண்டெய்னர் வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர். அதில் பாக்கு மட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றி பார்த்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. அந்த வாகனத்தில் மொத்தம் 100 சிறு சிறு பெட்டிகளில் பான் மசாலா, நிகோடின் ஆகியவை தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு 15 லட்சம் ரூபாய்.


விசாரணையில், கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தது மேச்சேரியை சேர்ந்த பச்சமுத்து என்பதும், அவர்தான் அந்த வாகனத்தின் உரிமையாளர் என்பதும் தெரிய வந்தது. கடத்தி வரப்பட்ட புகையிலை பொருள்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, யாருக்கு அனுப்பப்படுகிறது என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த வாகனத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா விற்பனை; ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
 Attack on officials who went to inspect

திண்டுக்கல்லில் உள்ள மிகப் பிரசித்திபெற்ற பழனி முருகன் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பல்வேறு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 'முழுவதும் ஆக்கிரமிப்பு இல்லாத அளவிற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் பழனி கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது. பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகள் இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. அதேபோல் பிளாஸ்டிக் மற்றும் குட்கா விற்பனைக்கு முழுமையாக அங்கு தடை விதிக்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வட மாநில தொழிலாளர்கள் குடியிருந்து வரும் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த இடத்தில் தமிழக அரசு தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக பொருட்களை பறிமுதல் செய்து கொண்டிருந்த பொழுது அங்கிருந்த வட மாநில இளைஞர்கள் மற்றும் மக்கள் ஆய்வுக்காக சென்ற அதிகாரிகளை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டீக்கடையில் குட்கா விற்பனை; 3 பேர் கைது; 26 கிலோ பறிமுதல்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Sale of Gutka at Tea Shop; 3 arrested; 26 kg seized

 

தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு தடை விதித்துள்ளதோடு பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அவ்வபோது  ரகசிய தகவலின் பெயரில் பெட்டிக்கடை, மளிகைக் கடை, டீக்கடை, பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்தபோது, விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்ட் அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், எட்வரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.