Skip to main content

'குருமூர்த்தி ஒரு நல்ல மனிதர்'-நயினார் நாகேந்திரன் பேட்டி

Published on 06/06/2025 | Edited on 06/06/2025
 'Gurumoorthy is a good man' - Nainar Nagendran interview

பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும்  இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து  நேற்று (05/06/2025) காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டனர்.

3 மணி நேர சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த குருமூர்த்தி  மற்றும் சைதை துரைசாமி காரில் அமர்ந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்தனர். குருமூர்த்தி பேசுகையில், 'ராமதாஸ் என்னுடைய நண்பர் சார். நீண்ட நாட்களாகவே என்னுடைய நண்பர். என்னை ரொம்ப பிடிக்கும் ராமதாஸுக்கு. பாஜகவிற்காக நான் வரவில்லை. நண்பர் என்ற காரணத்தினால் வந்தேன். இங்கு அன்புமணி ராமதாஸ் வந்ததே எனக்கு தெரியாது' என தெரிவித்திருந்தார்.

நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ''பாமகவில் நிகழ்வது உட்கட்சி பிரச்சனை. உட்கட்சி பிரச்சனை குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது. அவர்கள் அப்பா மகன் எனவே இது அவர்களுடைய சொந்த பிரச்சனை. அவர்களே பேசி தீர்த்துக் கொள்வார்கள்'' என்றார்.

செய்தியாளர் ஒருவர் 'குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை சந்தித்துள்ளனர். பாஜக-அதிமுக கூட்டணியில் பாமக சேருமா?' என கேள்வி எழுப்பிய நிலையில்,''குருமூர்த்தி,சைதை துரைசாமி ஆகியோர் தனிப்பட்ட முறையில் சென்றுள்ளார்கள் அதற்கும் பாஜகவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. சமாதானமாக எல்லோரும் ஓரணியில் சேர்ந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய போக்கு'' என்றார்.

செய்தியாளர் ஒருவர் 'விஜய்க்கு அழைப்பு இருக்குமா?" என்ற கேள்விக்கு 'விஜய்க்கு அழைப்பு கொடுத்திருக்கிறோம் பதில் வரும்' என்றார்.

NN

இந்நிலையில் இன்று மதுரையில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''சமரசம் என்ற வார்த்தையில் எப்பொழுதுமே பாஜகவிற்கு நம்பிக்கை உண்டு. ஆனால் பமாகவுடன் பாஜக இதுவரை பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. குருமூர்த்தி ஒரு நல்ல மனிதர். நாட்டில் நல்லவை நடக்க வேண்டும் என்ற எண்ணமும், செயல்பாடும் அவரின் துக்ளக் பத்திரிகையில் வரும். குருமூர்த்தி மக்களின் நலம் விரும்பி '' என்றார்.

செய்தியாளர் ஒருவர் 'பாமக ராமதாஸ் பாஜக கூட்டணியை விரும்பவில்லை. காலையில் பார்த்தால் 'பாரத் மாதாகீ ஜே' என கத்திக் கொண்டு வந்தார்கள் என்ற கருத்தை வைத்துள்ளார்' என்ற கேள்விக்கு, ''தேர்தல் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அடுத்த தேர்தல் வர இன்னும் 10 மாதம் உள்ளது. எனவே அன்று நடந்ததை பற்றிக் கூற ஒன்றும் இல்லை. தமிழக பாஜக தலைவராக நான் வந்ததில் இருந்து நான் சொல்வது திமுகவை வீழ்த்த எல்லோரும் ஓரணியில் சேர வேண்டும் என்பதே என் கருத்து'' என்றார்.

சார்ந்த செய்திகள்