Skip to main content

ரவுடி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Guntas case against 4 main culprit in rowdy murder case
காட்டூர் ஆனந்தன்

 

சேலம் அருகே ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கில் பிடிபட்ட நான்கு ரவுடிகளை ஒரே நாளில் மாவட்டக் காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

சேலம் அருகே உள்ள வலசையூரைச் சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன் என்கிற ஆனந்தன் (44). கொலை, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி. கடந்த பிப். 5ம் தேதி இரவு இவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிப் படுகொலை செய்தது.

 

Guntas case against 4 main culprit in rowdy murder case

 

இது குறித்து காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் காட்டூர் ஆனந்தனின் உறவினரான குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (40), அவருடைய கூட்டாளிகள் சின்னனூரைச் சேர்ந்த சக்திவேல் (35), வேலம்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார் (26), கன்னங்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (36) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.     

 

இவர்களில் ரவுடி அன்பழகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது ஏற்கனவே அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட சில குற்ற வழக்குகள் விசாரணையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து வந்ததாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காரிப்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ், மாவட்ட காவல்துறை எஸ்பி சிவக்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அன்பழகன் உள்ளிட்ட நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

 

இதையடுத்து நான்கு பேரையும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.