Skip to main content

இருபது வருடம் கழித்து முல்லைப் பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம்! தமிழக கேரள அதிகாரிகள் ஆய்வு!!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

Ground electricity for Mullaiperiyaru dam after twenty years! Tamil Nadu Kerala officials study !!


தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணைப் பகுதிக்கு வல்லக்கடவு பகுதியிலிருந்து வனப்பகுதி வழியாக மின்சாரம் சப்ளையாகி வந்தது.


இந்நிலையில்தான், கடந்த 2000-ல் இப்பகுதி வழியாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில் காட்டுயானை ஒன்று இறந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 19.06.2000 முதல் பெரியாறு அணைப்பகுதிக்கு, சப்ளை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டது. அன்று முதல் பெரியாறு அணைப்பகுதியில் சோலார் மின் விளக்குகளும், ஒலிக்குறைவான ஜெனரேட்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 

அதற்கு மாற்று ஏற்பாடாக, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின் கம்பிகளை வனப்பகுதியில் தரைவழியாகக் கொண்டு செல்ல தமிழக பொதுப் பணித்துறை கேரள அரசிடம் அனுமதி கேட்டது. அதற்கான செலவாக 1 கோடியே 66 லட்சம் ரூபாயைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு கேரள மின்வாரியத்திற்குச் செலுத்தியது.


ஆனால், கேரள வனத்துறை அனுமதி தராததால் பணி காலதாமதமாகி வந்தது. இந்த நிலையில், பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்வது குறித்து, தமிழக கேரள பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் நேற்று வல்லக்கடவு முதல் பெரியாறு அணைவரை ஆய்வு செய்தனர். தமிழக அரசு சார்பாகக் கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு அணை செயற் பொறியாளர் சாம் இர்வின், தமிழக மின்வாரியச் செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அதிகாரிகளும், கேரளா சார்பில் கேரள மின்வாரிய உதவி முதன்மை பொறியாளர் மனோஜ், செயற்பொறியாளர் பார்வதி, அசிஸ்டன்ட் ஃபீல்டு டைரக்டர் விபின்தாஸ், முல்லைப் பெரியாறு காவல்நிலைய டி.எஸ்.பி நந்தன்பிள்ளை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

பின்னர் இதுகுறித்து பெரியாறு அணை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், வல்லக்கடவிலிருந்து பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அதனால் தரைவழி மின்சாரம் கொண்டு செல்லக்கூடிய பகுதிகளை இருமாநில அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்ததாகவும், இன்னும் ஒருசில நாட்களில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆக, இருபது வருடம் கழித்து மீண்டும் முல்லைப் பெரியாறு அணைக்கு தரைவழி  மூலம் மின்சாரம் கொண்டு போக உள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

136 அடியை தொட்ட முல்லை பெரியாறு; முதல் கட்ட எச்சரிக்கை விடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 Mullai Periyar who touched 136 feet; First stage warning leave

 

முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதை அடுத்து முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்து வருகிறது. நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து அணை 138 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 140 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் மற்றும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு 1000 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.