Groom passed away while engaged to be married!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சௌந்தரராஜன்(32). இவர், கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது பெற்றோர் செளந்தரராஜனுக்கு திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். அதற்காக பெண் பார்த்து இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அதன் படி, வரும் 25ம் தேதி செளந்தரராஜனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர் நண்பர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் வழங்கி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், நேற்று முன்தினம் சௌந்தரராஜனின் சகோதரர் சிவகுமார் கோவையில் இருந்த செளந்தரராஜனுக்கு திருமண வேலைகள் தொடர்பாக செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளார். ஆனால், சௌந்தரராஜன் செல்போன் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளது. நீண்ட நேரம் முயற்சி செய்தும் சௌந்தர்ராஜனுடன் பேச முடியவில்லை. இதையடுத்து சிவக்குமார் கோவையில் உள்ள சௌந்தரராஜனின் நண்பர்கள் சிலரை தொடர்புகொண்டு, அவரது அறைக்கு சென்று பார்க்குமாறுகூறியுள்ளார்.

Advertisment

அவரது நண்பர்கள் கோவை பீளமேடு டீச்சர்ஸ் காலனியில் செளந்தரராஜன் தங்கியிருந்த அறைக்குவிரைந்து சென்று பார்த்தபோது, அங்கு செளந்தரராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது நண்பர்கள் இதுகுறித்து உடனடியாக சௌந்தர்ராஜனின் சகோதரர் மற்றும் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் சௌந்தரராஜன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரது அறையில் சௌந்தரராஜன் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். அதில், செளந்தரராஜன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில் பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு கடன் பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் வாழ பிடிக்கவில்லை அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது உடலை நல்லபடியாக அடக்கம் செய்யுங்கள். என் சுய விருப்பத்தின் பேரில் தற்கொலை செய்து கொள்கிறேன் என பதிவு செய்துவிட்டு தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.