Groom lost their life himself

Advertisment

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயது ரவிக்குமார். புதிய கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஓட்டும் வேலை பார்த்து வந்த இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. கடந்த 12ஆம் தேதி மாலை பணி முடிந்து ரவிக்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது ரவிக்குமார் மது அருந்தியுள்ளார். ஊரில் உள்ள அவரது உறவினர்களுக்கு போன் செய்து கொண்டு, அப்படியே அங்குள்ள அறைக்கு தூங்கச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், நேற்று காலை ரவிக்குமாரின் உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையில் செல்போன் உடைந்து கிடந்துள்ளது. வேறு அறையில் ரவிக்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை மீட்டு கீழே இறக்கி வைத்தனர்.

இதுகுறித்து சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரவிக்குமார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவிக்குமார் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.