ஏற்காடு அருகே 14 வயதே ஆன சிறுமிக்கு 32 வயது வாலிபருடன் கட்டாயத் திருமணம் நடந்ததையடுத்து குழந்தைகள் திருமண தடைச்சட்டத்தின் கீழ் புதுமாப்பிள்ளை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவருடைய மகன் அன்பழகன் (32). இவருக்கும் ஏற்காடு வெள்ளக்கடையைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிலர், 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளதாக சேலம் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் அளித்தனர்.
அதன்பேரில் அதிகாரிகள் நிகழ்விடம் சென்று நேரில் விசாரணை நடத்தினர். சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரியவந்தது. குழந்தைகள் நல அதிகாரிகள் கொண்டலாம்பட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மணந்து கொண்ட புதுமாப்பிள்ளை அன்பழகன், குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக மணமகனின் பெற்றோர் வெள்ளையன், வெள்ளாயி, சிறுமியின் பெற்றோர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.