Skip to main content

நீர்நிலைகளில் குருங்காடு அமைக்க ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கிய மணமக்கள்...

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், மறமடக்கி, ஏம்பல், மாங்காடு, வடகாடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, ஒட்டங்காடு, குருவிக்கரம்பை, நாடியம், களத்தூர் மற்றும் பல கிராமங்களில் பல வருடங்களாக  மராமத்து செய்யப்படாமல் துர்ந்து கிடந்த ஏரி, குளங்களையும், வரத்து வாய்க்கால்களையும் கிராமத்தினர் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் இளைஞர்கள் தன்னார்வமாக சீரமைத்து வருகின்றனர். 

groom and bride gave tree samplings


இளைஞர்களால் சீரமைக்கப்பட்டுள்ள ஏம்பலில் 8 குளங்கள் உள்பட 50 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் தற்போது பெய்த மழைத் தண்ணீராலும் காவிரித் தண்ணீராலும் பெருகி உள்ளது. இந்த நீர் பெருக்கத்தைப் பார்த்து பல வருடங்களுக்கு குளங்களில் தண்ணீர் பெருகி இருப்பதை பார்க்கும் போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது என்றனர்.

அதே போல இந்த நீர்நிலைகளின் கரைகளை பாதுகாக்க வெட்டி வேர், பனை விதை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் தொடங்கி உள்ளர். மேலும் குளங்களின் மத்தியில் அழிந்து வரும் பறவை இனங்களைக் காக்க சேந்தன்குடி மரம் தங்கச்சாமி பெயரில் குருங்காடுகள் அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த அனைத்திந்திய வாலிபர் சங்கம் விமல்துரை, சுசி ஆகியோரின் திருமணம் கீரமங்கலத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் மேடையில் தயாராக வைக்கப்பட்டிருந்த மா, பலா, நாவல், புங்கன் என பல வகையான ஆயிரம் மரக்கன்றுகளை மணமக்கள் கைஃபா தன்னார்வ நீர்நிலை பாதுகாப்பு குழுவினரிடம் வழங்கி இளைஞர்களால் சீரமைக்கப்பட்டு வரும் நீர்நிலைகளில் அமைக்கப்படும் குருங்காடுகளில் இந்த மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வலியுறுத்தினார்கள். இந்த செயலைப் பார்த்து திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்த வந்தவர்களும் மணமக்களை வாழ்த்தியதுடன் பாராட்டியும் சென்றனர். 

மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட கைஃபா குழுவினர் கூறும் போது,"ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய 4 தாலுகாக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்த கைஃபா குழு ஒவ்வொரு தாலுகாவிலும் சீரமைக்கப்படும் நீர்நிலைகளில் தனது இறுதி மூச்சுவரை மரக்கன்றுகளை நட்டு வளர்த்ததுடன் மரம் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சேந்தன்குடி கற்பகசோலை மரம் தங்கச்சாமி பெயரில் குருங்காடுகளை உருவாக்கி வருகிறோம். இப்போது இந்த மணமக்கள் வழங்கிய ஆயிரம் மரக்கன்றுகளையும் குருங்காடுகளில் நடப்பட்டு தொடர்ந்து பராமரித்து வளர்ப்போம் என்றனர். 


கடந்த சில மாதங்களாக இந்த 4 தாலுகாவிலும் திருமணம், பிறந்த நாள் என்று ஒவ்வொரு நிகழ்சிகளையும் நடத்தும் இளைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அந்த தொகையை எதிர்கால சந்ததிகளுக்காக நீர்நிலைகளை சீரமைத்து பாதுகாக்கவும், மரக்கன்றுகளை நடவும் என பயனுள்ள செலவுகளை செய்து வருவது பாராட்டத்தக்கது. 
        
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தொந்தரவு இல்லாமல் இருந்தவர்களை வெட்டி சாய்த்துள்ளனர்' - வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
nn

ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைப்படை அமைப்பினர் பல்வேறு இடங்களில் மரங்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்காக பேசுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், 'காற்றில் உள்ள நச்சுகளை நீக்கி சுவாசிக்க பிராணவாயு கொடுக்கும் உயிருள்ள எங்களை சமூக விரோதிகள் எக்காரணமுமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.

26/11/2023 ஆம் தேதி பாரதி நகர் ஹோட்டல் பீமாஸ் நளபாகம் எதிரே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலையோரம் இருந்த எங்களின் சகோதரரை வெட்டி சாய்த்துள்ளார்கள். மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்ற தடை ஆணையை மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லையா? மனிதர்களை வாழவைக்கும் எங்களை வாழ விடுங்கள். கண்ணீருடன் மரங்களும் செய்யது அம்மாள் பசுமை படையும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

Next Story

''என் மரணமே கடைசியாக இருக்கட்டும்; கருணைக் கொலை செய்யுங்கள்'' - மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

mettupatti number 9 tamarind tree

வணக்கம்,

 

நான் புளியமரம் பேசுறேன்.. என் இயற்கைக்கு மாறான மரண கதையை கொஞ்சம் கேட்டுட்டு போங்க..

 

புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் மேட்டுப்பட்டி கேட் - ரைஸ் மில் இடைப்பட்ட இடத்தில் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிழல் தரவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு பழம் தரவும், சாலை ஓரமாக என்னை நட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், தண்ணீர் ஊற்றி வளர்த்தனர். அப்ப எனக்கு நம்பர் 9. அந்த பகுதியில் யார் வீட்ல நல்லது, கெட்டது நடந்தாலும் என் நிழலில்தான் நிற்பாங்க. இதுவரை லட்சம் பேருக்கு நிழல் கொடுத்திருப்பேன். குழம்பு ருசிக்க பழம் கொடுத்தேன். லட்சக்கணக்கான விதை கொடுத்தேன்.

 

நான் வளர்ந்தது போல சாலையும் விரிவடையத் தொடங்கியது. அந்தப் பக்கம் நடந்து போறவங்களும், வாகனங்களில் போறவங்களையும் கவர்ந்து இழுக்கிறது மாதிரி கிளைகளைப் பரப்பி பசுமையான பச்சை இலை போர்த்தி வனப்பாக இருந்தேன். அத்தனை பேரும் என்னை பார்க்காமல் போக மாட்டாங்க.. அவ்வளவு அழகா இருப்பேன். எல்லாரும் என்னையே பார்க்கிறதைப் பார்த்த பெரிய பெரிய கடைக்காரங்க, பயிற்சி மையகாரங்க அவங்க கடை விளம்பர பதாகைகளை என் மேல கட்டினாங்க. அது காற்றில் பறந்தது. அப்புறம் ஆணி வச்சு அடிச்சு பதாகை வச்சாங்க. என் மேல ஆணி அடிக்கும் போது எனக்கு வலிக்கும் என்பதை அவங்க மறந்துட்டாங்க. காரணம் அவங்களோட கவர்ச்சியான விளம்பர பதாகையை எல்லாரும் பார்க்கிற மாதிரி வனப்பான மரத்தில் அடிச்சாச்சுன்னு மகிழ்ச்சி. இப்படியே நூற்றுக்கணக்கான ஆணிகள் அடிச்சதுல எனக்கும் வலி தாங்கல.

 

mettupatti number 9 tamarind tree


 

ஆணிகள் அடிச்சதுல உடலெங்கும் காயம்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்கிட்டேன். இப்ப முழுமையாக இல்லன்னாலும் 99% செத்துட்டேன். இப்ப அந்த வழியாக போறவங்க இந்த 9 ம் நம்பர் மரம் பட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு, என் கிட்டக்கூட ஒதுங்க பயந்து ஓடிப் போறாங்க. நீங்களே சொல்லுங்க நானாக தற்கொலை செய்து கொண்டேனா? இல்லை என்னை கொஞ்சம் கொஞ்சமா ஆணி அடிச்சு கொன்றார்களா? ஆனால், என்னை வச்சு வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சிருக்கு. அதனால தான் இளமையா இருக்கும் போது 9 ம் நம்பர்ல இருந்த என் மீது, இயற்கைக்கு மாறான சந்தேக மரணத்திற்கான ஐபிசி பிரிவு 174 போட்டு, என் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விசாரிக்க சொல்லி இருக்காங்க.

 

மரணத்தின் கடைசி தறுவாயில் ஒரு கோரிக்கை நான் 99% உயிரிழந்துட்டேன். அதனால் என் நிழலில் நின்றவர்கள் கூட இப்ப என்னைப் பார்த்து பயந்து தூரமா போறாங்க. எனக்கே என் மீது சந்தேகம் வந்துடுச்சு. இதுவரை யாருக்கும் சிறு தீங்கும் செய்யாத நான், எந்த நேரத்திலும் என் கிளைகள் உடைஞ்சு விழுந்து சாலையில் போற யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுவேனோ என்ற அச்சம் எனக்குள்ளும் உள்ளது. அதனால என்னை வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளே என்னை கருணை கொலை செய்து மற்றவர்களை காப்பாற்றுங்கள். என்னை கருணைக் கொலை செய்வதோடு விட்டுவிடாமல் என்னோட இயற்கைக்கு மாறான மரணத்தை (ஐபிசி 174) முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நன்றாக விசாரித்து, என்னைப் போன்ற மரக்குழந்தைகளின் மேல் ஆணி அடிப்பதையும், அடியில் குப்பை கொட்டி எரிப்பதையும் தவிர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாலையோர மரக்குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற முடியும். என் மரணமே கடைசியாக இருக்கட்டும், நடவடிக்கை எடுங்கள். என்னை கருணைக் கொலை செய்து அந்த இடத்திலிருந்து அகற்றிய பிறகு, என் நினைவாக என்னைப் போல ஒரு புளிய மரக்குழந்தையை நட்டு வளருங்கள். அந்த மரக்குழந்தை வடிவில் மீண்டும் உங்களுக்கு நிழல் தருகிறேன்.

 

இதுவரை என் சோகக் கதை கேட்ட உங்க எல்லாருக்கும் நன்றிகள்.
அன்புடன்.. மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்.