Skip to main content

“திருக்குறள் பாதுகாக்கப்பட்ட மாபெரும் ஞானம்” - குடியரசுத் தலைவர்

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

Great wisdom preserved in Thirukkural  President

 

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். மேலும் இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

இவ்விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “உலகளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா திகழ்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்களின் கனவு பெரியதாக இருக்க வேண்டும். இந்தியா மறுமலர்ச்சி அடையும் தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுவது உங்கள் அதிர்ஷ்டம். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார். இவரைத் தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர், “சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம் உள்ளிட்ட 6 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர். சர் சி.வி. ராமன், சந்திரசேகர் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் இங்கு படித்தவர்களே. பாலின சமத்துவத்திற்கான கோயிலாகச் சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது. வளமான கலாச்சாரம், நாகரீகத்தைக் கொண்டது தமிழ்நாடு; கோயில் கட்டடக் கலை, சிற்பக் கலை மனிதக் குலத்தின் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது” என்றார்.

 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் தனது டிவிட்டர் பதிவில், “சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பிராந்தியம், நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக விளங்கி வருகிறது. சங்க கால இலக்கியத்தின் மரபு வழி, இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். திருக்குறள் பாதுகாக்கப்பட்ட மாபெரும் ஞானம். பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது. உங்கள் பல்கலைக்கழகத்துக்கு வளமான வரலாறும் புகழ்பெற்ற மரபும் உள்ளது. இந்தியாவின் ஆறு முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக இருந்தவர்கள். இன்று நீங்கள் நடந்து செல்லும் அதே பாதையில் அவர்களும் சென்றுள்ளனர் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்வானி இல்லத்திற்கே வந்த ‘பாரத ரத்னா’ விருது!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Advani awarded Bharat Ratna The President who went to his home

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி குடியரசுத் தலைவர் இல்லத்தில் நேற்று (30.03.2024) நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்நிலையில் அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாதாக இந்தியாவின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய்க்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அத்வானி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசியல் தலைவரான அத்வானி, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும், தனித்துவத்துடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளார். கடந்த 1927 ஆண்டு கராச்சியில் பிறந்த அவர், பிரிவினையின் காரணமாக 1947 இல் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். பண்பாட்டு தேசியம் பற்றிய அவரது பார்வையும், அவர் பல தசாப்தங்களாக, நாட்டிற்காக முழுவதும் கடுமையாக உழைத்து, சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்பில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்தார்.

Advani awarded Bharat Ratna The President who went to his home

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, விவாதத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம் நாடாளுமன்ற மரபுகளை வளப்படுத்தியது. உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, துணைப் பிரதமராக இருந்தாலும் சரி, அவர் எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து, கட்சி எல்லைகளுக்கு அப்பால் அவருக்கு மரியாதையையும் பாராட்டையும் பெற்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.