Skip to main content

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தரவில்லையெனில் மாபெரும் போராட்டம்! - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

mrk

 

புயல், மழையினாலும், என்.எல்.சி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் தரவில்லை என்றால், என்.எல்.சியை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

கடலூர் மாவட்ட இயற்கை வளத்தையும், இம்மாவட்ட மக்களின் வீடுகள், நிலங்கள், உடைமைகளையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து உருவாக்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இன்றைய நாளில் பல்லாயிர கோடிக் கணக்கான மதிப்புமிக்கச் சொத்துகளை உடையதாகவும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகள் லாபம் ஈட்டக்கூடிய மாபெரும் நிறுவனமாகவும் பெருவளர்ச்சி பெற்றிருக்கிறது.

 

இவ்வேளையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கக் கூடிய கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரிய, மனிதாபமற்ற செயலாகும். குறிப்பாக குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி ஒன்றியப் பகுதிகளான கருங்குழி, கொளக்குடி, நைனார்குப்பம், மருவாய், அரங்கமங்கலம், ராசாக்குப்பம், ஓணாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி, மேலப்புதுப்பேட்டை, வரதராஜன்பேட்டை, ரெட்டிப்பாளையம், குருவப்பன்பேட்டை, ஆடூர்அகரம், கண்ணாடி, விருப்பாட்சி, கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம், தீர்த்தனகிரி, சிறுபாலையூர், ஆதிநாராயணபுரம், காயல்பட்டு, வாண்டியாம்பள்ளம், ஆண்டார்முள்ளிபள்ளம், ஆலப்பாக்கம், பூவாணிக்குப்பம், அகரம், ஆயிக்குப்பம், அணுக்கம்பட்டு, பெத்தநாயக்கன்குப்பம், ரெங்கநாதபுரம், திருச்சோபுரம், தியாகவல்லி, தையல்குணாம்பட்டினம், தம்பிப்பேட்டை, டி.பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும், வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளிலும் நிரவி புயல் மற்றும் கன மழையின் காரணமாகவும், குறிப்பாக இப்பகுதிகளின் வழியாக என்.எல்.சி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினாலும் அடிக்கடி, இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு வீடுகள், கால்நடைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

 

ஆண்டு தோறும் மழை பெய்யும் காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீராலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.  குடியிருப்பு வீடுகளும் இடிந்து விழுகின்றன. என்.எல்.சி நிறுவனத்தினால் பாதிக்கப்படுகின்ற இந்தப் பகுதி மக்களுக்கு இந்நிறுவனம் எந்தவித உதவியும் செய்ய முன்வருவதில்லை. மேலும் நிரந்தரமாக வடிகால் அமைப்பதற்கு எந்தவித நிரந்தரமான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் என்.எல்.சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். அதிக லாபம் ஈட்டக்கூடிய என்.எல்.சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு நிரந்தரமாக கான்கீரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.  மேலும் என்.எல்.சி நிறுவனத்தினால் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என்.எல்.சி CSR நிதியினை முழுவதுமாக இம்மாவட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

 

எங்கள் நிலம், வீடுகளையும், உடைமைகளையும் அழித்து உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் CSR நிதியினை வேறு மாநிலத்திற்குப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு CSR நிதியின் மூலம் அடிப்படை வசதிகளான பாலங்கள், சிறு கல்வெட்டுக்கள், பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், வடிகால் வாய்க்கால்கள், குடிநீர், ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்துத் தர வேண்டும். என்.எல்.சி. நிர்வாகம் இதுவரை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

 

மேலும் என்.எல்.சி. சுரங்கம் வெடி வைப்பதினாலும், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடலூர் மாவட்டம் முழுவதும் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதிகள், வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் ஆழ்குழாய்க் கிணறுகள் பழுதடைந்துவிடுகிறது. ஆகவே மேற்கண்ட பகுதிகளுக்கும் மற்றும் NLC சுரங்கத்தைச் சுற்றியுள்ள குறிஞ்சிப்பாடி, புவனகிரி, விருத்தாசலம், நெய்வேலி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் உடனடியாக என்.எல்.சி. நிர்வாகம் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். நெய்வேலி என்.எல்.சி சார்ந்த பணிகளில், கடலூர் மாவட்டத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

உடனடியாக மக்களின் துயர் துடைக்க என்.எல்.சி நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எங்களை அழிக்கும் இந்நிறுவனம் தேவையா? என்கிற மனநிலைக்கும் இம்மாவட்ட மக்கள் தள்ளப்பட்டு மாபெரும் பெரிய போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை உள்ளது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.



இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.