Skip to main content

நேர்மையான அதிகாரியை டிரான்ஸ்பர் செய்ய பகீரத முயற்சி!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

Great attempt to transfer an honest officer

 

தலைமை சரியாக இருந்தால் நேர்மையான செயல்பாடுகள் நூறு சதவீதம் சாத்தியமாகும் என்பதற்கு ஈரோடு மாவட்டமே ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் கரோனா வைரஸ் பரவுவதிலிருந்து மக்களைக் காக்க போர்க் கால நடவடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகப்படுத்தப்பட்டது. மறுபுறம் ஏற்கனவே பத்தாண்டுகளாக நிர்வாக ரீதியாக புறையோடிக் கிடந்த ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சட்டத்திற்கு புறம்பான இல்லீகல் செயல்பாடுகளுக்குக் கடிவாளம் அமைத்து நேர்மையான நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழகம் முழுக்க மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் என அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், குறிப்பாக வேகத்துடன் செயல்படும் இளம் அதிகாரிகள் என ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளாக பதவியில் அமர்த்தப்பட்டனர்.

 

சட்டம், ஒழுங்கு, அரசுத் துறை, மாவட்ட நிர்வாக செயல்பாடுகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்கக் கூடாது என கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இது நேர்மையான நிர்வாகத்தைச் செயல்படுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக அமைந்தது. அந்த வரிசையில் தான் ஈரோடு மாவட்டத்தின் இந்த அதிரடி செயல்பாடுகள். அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை என சட்ட விரோத செயல்பாடுகளில் முன்னணி மாவட்டமாக இருந்தது. மாவட்டத்திற்கு புதிய  எஸ்.பி.யாக பொறுப்பேற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான டாக்டர் சசிமோகன் நேரடியாகவே அதிரடி ஆப்ரேசன் களத்தில் இறங்கினார்.

 

சென்ற மூன்று மாதத்தில் மட்டும் 500 கிலோ கஞ்சா, பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைப்பற்றியதோடு அதை விற்பனை செய்பவர், ஏஜென்ட், எங்கே இருந்து ஈரோட்டுக்கு இறக்குமதியாகிறது என்கிற ரூட்டை பிடித்து அதில் ஈடுபட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரைச் சட்டப்படி கைது செய்தார். அதில் பலர் குண்டர் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். சட்ட விரோத செயல்களில் அடுத்து முக்கியமானது லாட்டரி விற்பனை அதை கட்டுப்படுத்த எஸ்.பி. சசிமோகன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். லாட்டரி சீட்டு விற்ற ஏராளமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரளா போன்ற வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 41  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 89 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேற்படி சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வருபவர்கள் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் போலியாக எண்களை வெள்ளைத்தாளில் எழுதி அது வெளி மாநில லாட்டரி சீட்டுகள் என விற்பனை செய்கின்றனர். சில நபர்கள் அவர்களாகவே குலுக்கல் நடத்தி பரிசு கண்டிப்பாக விழும் என்றும் நேரடியாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பி ஒரு சில எண்கள் மற்றும் பரிசு விழுந்ததாகக் கூறி மக்களை, ஏழை தொழிலாளர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தடை செய்யப்பட்ட லாட்டரியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலமாக விற்பனை செய்வது மற்றும் ஏமாற்றுவது சட்டப்படி குற்றமாகும். அதேபோன்று தடை செய்யப்பட்ட லாட்டரிகளை வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும். அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சார்பில் மக்களுக்கு விழிப்புனர்வு பிரச்சாரமும் செய்யப்படுகிறது.

 

ஏற்கனவே பல ஆண்டுகளாக சட்டவிரோத லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வந்த கிரிமினல் ஜாம்பவான்கள் பலரையும் கைது செய்து அவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளது. எஸ்.பி. சசிமோகன் தனக்கென புதிய போலீஸ் குழுவை உருவாக்கி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலேயும் எஸ்.பி.யின் ஸ்பெஷல் குழு முழுமையாக கண்காணித்து நேரடியாக எஸ்.பி.யின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி, கஞ்சா, தடைசெய்த போதைப் பொருட்களின் விற்பனைகள் முழுமையாகவே தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சித் தலைமையின் எதிர்பார்ப்பை அமல்படுத்துவது போல் எஸ்.பி.யின் செயல்பாடு இருப்பதால், ஏற்கனவே லாட்டரி, கஞ்சா, தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனையில் பல கோடிகள் சம்பாதித்த கிரிமினல் குழுக்கள் ஒன்றிணைந்து எஸ்.பி. சசிமோகனை ஈரோட்டிலிருந்து மாறுதல் செய்ய பெரிய தொகையுடன் பகீரத முயற்சியுடன் சென்னையில் முகாமிட்டுள்ளார்களாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்