Skip to main content

பணம் தராத ஆத்திரத்தில் பாட்டியை கொலை செய்த பேரன்!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

The grandson who misbehaved in the rage

 

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் நெடுஞ்சாலையில் உள்ளது வட மாமந்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ஷேக் மதார் என்பவரது மனைவி 75 வயது அலீமா பீ. இவர் பாத்ரூமில் குளிப்பதற்குச் சென்றபோது தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். தற்செயலாக அவரது வீட்டுக்குச் சென்ற அவரது உறவினர்கள் அலீமா பீ. ரத்தக் காயத்துடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை நெருங்கிப் பார்த்தபோது அவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்திருந்த தங்க வளையல், செயின், மோதிரம் ஆகியவையும் களவாடப்பட்டிருந்தன.

 

இதையடுத்து அலீமா பீ. மகன் அலிப்சா மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அலீமாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் விசாரணையில் அலீமா பீ. கொலை செய்யப்பட்டது குறித்து அவரது பேரன் சல்மான் செய்யது என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஊரிலிருந்து தப்பிச் செல்ல மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சல்மானை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், “எனது பாட்டியிடம் குடிப்பதற்காக அடிக்கடி பணம் வாங்கிச் செல்வதுண்டு.

 

அப்படி சம்பவத்தன்று மது குடிக்கப் பணம் கேட்டபோது அவர் தர மறுத்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமுற்ற நான் அருகில் கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து பாட்டியின் தலையில் போட்டு கொலை செய்தேன். அதன் பிறகு அவர் அணிந்திருந்த ஒரு பவுன் வளையல் மற்றும் மோதிரம் ஆகியவற்றைக் கழட்டிக்கொண்டு வெளியூருக்குத் தப்பிச் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது நீங்கள் பிடித்துவிட்டீர்கள்” என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சல்மானுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்த போலீசார் இருவரையும் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 45 கிராம் உருக்கிய தங்க கட்டிகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மது குடிக்கப் பணம் தர மறுத்த தனது பாட்டியைக் கல்லால் அடித்து பேரன் கொலை செய்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.