Skip to main content

கிணற்றில் தவறி விழுந்து பலியான தாத்தா மற்றும் பேரன்!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021
Grandfather and grandson of the victim who fell into the well

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் தாலுகாவிற்குட்பட்ட கீழநீலிதநல்லூர் பகுதியின் தோணூகால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு ரமேஷ், மாரிமுத்து என்ற இரு மகன்களும் மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மாரிமுத்து என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமாலா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்திருக்கிறது. இத்தம்பதியருக்கு ஹரிவர்ஷன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்தில் முதல் பேரக் குழந்தை என்பதால் மாரியப்பன் தனது பேரன் ஹரிவர்ஷனுடன் எப்போதும் பாசமாகவே இருப்பார்.

 

மாரியப்பன் வெளியே சென்று வரும்போதெல்லாம் பேரனை பிரியமுடன் உடன் அழைத்து சென்று வருவது வழக்கம். அந்த பாசத்தில் மாரியப்பன் நேற்றைய தினம் தனது தோட்டத்தில் களையெடுக்கும் பணிகளைச் சரிபார்க்கச் சென்றபோது பேரன் ஹரிவர்ஷனை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது மாரியப்பனுக்குத் தாகம் எடுத்திருக்கிறது. தனது பேரன் ஹரிவர்ஷனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தண்ணீர் குடிப்பதற்காக தன்னுடைய வயலின் கிணற்றை நோக்கி நடந்திருக்கிறார். அந்தக் கிணறு சுற்றுச் சுவர் இல்லாமல் தரையோடு தரையாக அமைந்திருந்தது. அந்த சமயம் தண்ணீர் குடிக்கச் சென்ற மாரியப்பனுக்குத் திடீரென்று கால் இடற, பேரனுடன் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறார்.

 

தண்ணீரில் மூழ்கிய தாத்தாவும் பேரனும் சம்பவ இடத்தியே உயிர் இழந்திருக்கின்றனர். வயலில் வேலை செய்தவர்கள் கூச்சலிட்டிருக்கின்றனர். தகவலறிந்து ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த சிறுவனின் தந்தை மாரிமுத்துவும் மற்றும் அங்குள்ளவர்களும் கிணற்றிலிருந்து தாத்தா பேரன் இருவர்களையும் மீட்டிருக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பனவடலிச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திவருகிறார். தாத்தா பேரன் பலியான சம்பவம் அந்தப் பகுதியைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தாத்தாவுக்கு வழிகாட்டியான பேரன்; நெகிழ வைத்த பெண் காவலர்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

salem collector office visually challenged person govindan and his grandson sridhar

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம்.

 

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் மாவட்டம் மல்லியகரை என்ற பகுதியை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி முதியவர் கோவிந்தன் என்பவர் தனது 7 வயது பேரன் ஸ்ரீதர் உதவியுடன் மனு அளிக்க வந்திருந்தார். தனது மனுவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை வைத்திருந்தார்.

 

அவர்களைக் கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கோகிலா, உணவு வாங்கி வந்து மரத்தின் நிழலில் அமர்ந்து அவர்கள் இருவரையும் சாப்பிட வைத்தார். மேலும், அவர்கள் இருவரும் காலணிகள் இல்லாமல் கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வெறும் கால்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததை கவனித்த எஸ்.ஐ. கோகிலா இருவருக்கும் காலணி வாங்கிக் கொடுத்து பாதுகாப்பாக வீட்டுக்கு செல்லும்படி வழியனுப்பி வைத்தார். தாத்தாவுக்கு உதவிய சிறுவனின் செயலும், எஸ்.ஐ. கோகிலாவின் செயலும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

 

 

Next Story

பேரனை ஏமாற்றி பாட்டியின் நகை திருட்டு; போலீசார் விசாரணை

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

cuddalore pennalur village grandson and grandmother gold chain issue 

 

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு - வடலூர் இடையே உள்ள பின்னலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் அமிர்தவல்லி (வயது 50). இவர் தனது மகள் வழி பேரனுடன் தனித்து வசித்து வருகிறார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அமிர்தவல்லி வீட்டைப் பூட்டி சாவியை பேரனிடம் கொடுத்து பத்திரமாக வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வடலூரில் நடைபெற்ற வாரச் சந்தைக்கு காய்கறி வாங்கி வருவதற்காகச் சென்றுள்ளார்.

 

இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அமிர்தவல்லி வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த சிறுவனிடம், “உனது பாட்டி என்னிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். எனக்குக் கொடுக்க வேண்டிய அந்தப் பணம் வீட்டிலுள்ள பீரோவில் இருக்கிறது. அதைத் திறந்து எடுத்துக் கொள்ளுமாறு உன் பாட்டி என்னிடம் கூறிவிட்டு சந்தைக்குச் சென்றுள்ளார்” என்று மர்ம நபர் கூறியதை உண்மை என நம்பிய சிறுவன் வீட்டைத் திறந்ததோடு தன்னிடம் இருந்து பீரோ சாவியையும் கொடுத்துள்ளான்.

 

இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர் பீரோவில் அமிர்தவல்லி வைத்திருந்த இருந்த மூன்று பவுன் நகையைத் திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். சந்தைக்குச் சென்ற அமிர்தவல்லி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் ஒன்றும் அறியாத பேரன் நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். விவரமறியா சிறுவனை ஏமாற்றி நகையைத் திருடிச் சென்றதை அறிந்த அமிர்தவல்லி திருடனைக் கண்டுபிடிக்கக் கோரி சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை ஏமாற்றி நகையைத் திருடிச் சென்ற திருடனைக் கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் மர்ம திருடன் உருவ அமைப்பு குறித்தும் சிறுவனிடம் விசாரித்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.