Skip to main content

உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் கிராம சபைக் கூட்டம்! 

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Grama Council meeting excluding local election venues!
                                                    மாதிரி படம் 

 

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதனுடன் சேர்த்து தமிழ்நாட்டில் ஏனைய விடுபட்ட மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும், சில உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 

 

வரும் அக். 2ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், திருச்சியில் தேர்தல் நடக்கும் அந்த ஊராட்சிகளைத் தவிர, திருச்சி மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார். கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கிராம ஊராட்சிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு, நிர்வாகத்தில் இருந்த நடைமுறை சிக்கல்களை விலக்கி ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதி, அரசினால் அவ்வப்போது அளிக்கப்பட்டுவருகிறது. 02.10.2021 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணிக்குள்ளாக கிராம சபைக் கூட்டத்தில் பெருமக்கள் கலந்துகொண்டு ஊராட்சிகளில் கிராம சபை நடைபெறுவதை உறுதிபடுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.