Skip to main content

திருமண அமைப்பாளர்கள் நிவாரணம் கோரிய மனு - 6 வாரங்களில் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
chennai highcourt

 

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருமண அமைப்பாளர்கள் சங்கத்தினர் நிவாரணம் கோரிய மனுவைப் பரிசீலித்து,  6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கரோனா தொற்றின் காரணமாக மார்ச் 24 -ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால்,  திருமண நிகழ்ச்சிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மட்டுமே  அனுமதிக்கப்படுகின்றன. அதனால், பொதுமக்கள்  பெரும்பாலானோர் திருமணத் திட்டங்களை ஒத்திவைத்து வருகின்றனர். இதனால், பெருமளவில் ‘மேரேஜ் புரோக்கர்ஸ்’ என்று சொல்லக்கூடிய திருமண அமைப்பாளர்களின் தொழில், முழுவதுமாக முடங்கியுள்ளது. 

 

இந்நிலையில், வருமானம் இல்லாமல் தவிக்கும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தகுந்த  நிவாரணம் கோரி, தமிழக அரசிடம் தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள்  சங்கத்தின்   சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்த மனு மீது இரண்டு மாதங்களுக்கும் மேலாக  நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு  தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கு, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்  தரப்பில் வழக்கறிஞர் எழில்ராஜ் ஆஜராகி,  வருமானம்  இல்லாமல்  இருக்கும் சங்க உறுப்பினர்களுக்கு உரிய  நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று ஏப்ரல் 20-ஆம் தேதி மனு கொடுத்தும், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.விஜயக்குமார் ஆஜராகி, திருமண அமைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதுவரை எந்த திட்டமும் இல்லை எனத் தெரிவித்தார். 

 

இதையடுத்து, நீதிபதி ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவில், திருமண அமைப்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கம் அளித்த மனுவை, தமிழக அரசு சட்டத்திற்குட்பட்டு உரிய முறையில் பரிசீலித்து, 6 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; மனைவியின் வினோத கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Disappointing results deny the wife's strange request on extramarital affair in UP

உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான ராம் கோவிந்தின் மனைவி கவிதா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான 7 ஆண்டுகள் ஆன இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கவிதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், கவிதாவின் கணவர் ராம் கோவிந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதில் மனமுடைந்த கவிதா, நேற்று முன் தினம் (03-04-24) தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கவிதாவை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்து கம்பத்தில் ஏறியவாறு இருந்ததால், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனை, அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனையடுத்து, கீழே வந்த கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கவிதா தனது ஆண் நண்பரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்குமாறு தனது கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வினோத கோரிக்கைக்கு ராம் கோவிந்த் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண், டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.