
அரசு சேவை இல்லத்தில் தங்கி இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து சேவை இல்லத்தின் பெண் கண்காணிப்பாளர் அலட்சியமாக பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னை தாம்பரம் சானிடோரியம் அருகே அரசு மகளிர் சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கி புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
மிகவும் பாதுகாப்பான பகுதியாக இந்த அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த தந்தையை இழந்த 13 வயது சிறுமி அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு சேர்வதற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். தனியாக இருந்த சிறுமி காலையில் தூங்கி எழுந்து வெளியில் வந்த போது மர்ம நபர் ஒருவர் முகத்தை துணியால் மறைத்தபடி சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் மாணவி பலமாக தாக்கப்பட்டார். மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். மற்ற சில மாணவிகள் ஒன்று சேர்ந்து மாணவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவிக்கு இரண்டு காலிலும் எலும்புமுறிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அரசு சேவை இல்லத்தின் காவலாளி மேத்யூ என்பவர் உள்ளே புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமி சேவை இல்லத்திற்கு புதியவர் என்பதால் வெளியே சொல்லமாட்டார் என முகத்தை மூடிக்கொண்டு பாலியல் கொடுமை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளி மேத்யூவின் தாய் அதே சேவை மையத்தில் வேலை செய்துவந்த நிலையில் உயிரிழந்த நிலையில் கருணை அடிப்படையில் காவலாளி பணிக்கு நியமிக்கப்பட்ட மேத்யூ இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சேவை மையத்தின் கண்காணிப்பாளர் ரேவதியிடம் என்ன நடந்து என அங்கிருந்தவர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பியபோது, 'பாப்பா கீழே விழுந்தது தான் தெரியும் சார்' என்றார். ஒரு பொண்ணுக்கும் இப்படி நடந்திருக்கிறது. நீங்கள் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள் எனக்கேட்க, 'காணிப்பாளர்' என்றார். அந்த பொண்ணுக்கு என்ன நடந்தது என கேட்டதற்கு, ''குழந்தைக்கு அடிபட்டது என்று சொன்னாங்க. கால் முறிஞ்சிருக்கு சொன்னாங்க. இன்னும் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. பசங்களை எல்லாம் பார்த்துக் கொள்வதுதான் என்னுடைய வேலை. நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை விட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்' என்றார்.
அப்பொழுது ஒருவர் 'உங்கள் ஏரியாவில் ஒரு பிரச்சனை நடந்திருக்கிறது. அதை ஹேண்டில் பண்ணுவதை விட்டுவிட்டு எனக்கு மயக்கம் வருகிறது என்று சொன்னால் எப்படி? ஆர்மியில் காஷ்மீர் வரை சென்று தாக்கிவிட்டு வருகிறார்கள். ஆனால் உங்கள் காம்பவுண்டுக்குள் உள்ள 130 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியவில்லை என்றால் எப்படி' என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.