Skip to main content

மாணவிகளுக்கு பிரியாணி விருந்து; அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்   

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Govt school teachers have a biryani party for the students

 

கீரமங்கலம் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழாவை கொண்டாடும் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாரிமுத்து, வள்ளிநாயகி ஆகியோர் தலைமையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் முன்னிலையில் மாணவிகளின் நடனம், பாடல், ஆசிரியையின் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

 

தொடர்ந்து மகளிர் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியைகள்  மாணவிகளுக்கு வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தனர். ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றோம். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்லி பரிசுகள் வழங்குவதும் வழக்கமாக உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள், இலக்கியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதும் உள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களை இனிப்பு, பூ கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது. 

 

Govt school teachers have a biryani party for the students

 

ஆனால், புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு சிறப்பு தினங்களையும் சிறப்பாக கொண்டாடும் பள்ளி நிர்வாகம், குழந்தைகள் தினத்தையும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டனர். குழந்தைகள் தினத்தில் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 900  மாணவிகளுக்கும் வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுக்க திட்டமிட்ட ஆசிரியர்கள் சுமார் ரூ. 30 ஆயிரம் செலவு செய்து சைவ பிரியாணி தயாரித்து மதியம் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில், ஆசிரியர்கள், ஆசிரியைகள் அனைத்து மாணவிகளையும் பள்ளி வளாகத்தில் அமர வைத்து ஒரே நேரத்தில் வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தனர்.                  


இது குறித்து மாணவிகள் கூறும் போது, “நாங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்துவிட்டால் எங்கள் ஆசிரியர்கள்  எங்களை பெற்றோர்களைப் போல  கவனித்துக் கொள்வார்கள். இன்று எங்கள் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளாக  நினைத்து எங்களை வரவேற்று மதியம் சொந்த செலவில் வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இந்த பள்ளிக்கு சிறந்த பெயரை வாங்கிக் கொடுப்போம்” என்றனர். இதே போல கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிக்கன் குழம்பு முட்டையுடன் அசைவ உணவு வழங்கி மாணவர்களை மகிழ்வித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.