Skip to main content

பள்ளிக்கே வராத ஆசிரியர்; வந்ததாக கணக்கு காட்டி பல லட்சம் மோசடி!

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

 Govt School teacher who did not come to school has cheated several lakhs by signing his signature

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் இடைநிலை ஆசிரியராக செல்வம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 18 மாதங்களாக பக்கவாதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் மருத்துவ விடுமுறை அல்லது மற்ற எந்த விடுமுறையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர் மாதம் ரூ. 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியராக உள்ள ரமேஷ் மற்றும் தலைமை ஆசிரியர் இளங்கோவன் ஆகிய இருவரும் அவரிடம் சம்பளத்தில் மாதம் கணிசமான தொகையை கமிஷன் பெற்றுக்கொண்டு இவருக்கு பதிலாக ஆசிரியர் ரமேஷ் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

 

 Govt School teacher who did not come to school has cheated several lakhs by signing his signature

 

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர் செல்வம் இல்லாததால் அவருக்கு பதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புக்கு பாடம் எடுக்க தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ரமேஷ் ஏற்பாட்டின் பேரில் ஆசிரியர் ரமேஷின் மருமகள் பிரகதீஸ்வரி என்ற பெண் ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 மாதம் மட்டுமே பணியில் இருந்துள்ளார். இவருக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர் செல்வத்திடம் பணத்தைப் பெற்று ஊதியம் வழங்கியுள்ளனர். இதுகுறித்த புகார் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர் விசாரணை மேற்கொண்ட போது கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர் செல்வம் பள்ளி வகுப்பறையில் பெயருக்காக வந்து உட்கார்ந்து விட்டு செல்கிறார் என்று பள்ளி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

இது குறித்த தகவல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வராமல் மற்ற ஆசிரியர்கள் கையெழுத்து போட்டு கமிஷன் வாங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கல்வித்துறையில் மற்றொரு சாதனை; தனியார் பள்ளியின் புதிய முயற்சி!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Private school's introduced AI teacher in kerala

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 

அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில்  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிக்காக ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஐரிஸ்’ (IRIS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. 

3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் திறன் கொண்ட இந்த ரோபோவின் கால்களுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் மூலம், ரோபோ ஆசிரியர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்ல முடியும். இந்த ரோபோவை ‘மேக்கர்ஸ் லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.